முசிறி பகுதியில் மணல் கடத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தா.பேட்டை:
முசிறி அடுத்த அய்யம்பாளையம் ஏவூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (வயது 24). இவர் முசிறி காவிரி ஆற்றுப்படுகை மற்றும் அய்யாற்றில் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தா.பேட்டை அடுத்த கண்ணனூர் பகுதியில் ஜெம்புநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாலிக், செல்லப்பா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது துறையூர் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்த போது ஆனஸ்ட்ராஜ் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனஸ்ட்ராஜை கைது செய்து மணல் கடத்தி சென்ற லாரியை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் ஆனஸ்ட்ராஜை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ் மாறன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரைத்தார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் மேற்பார்வையில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மணல் திருட்டில் ஈடுபட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆனஸ்ட்ராஜை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.