செய்திகள்

ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

Published On 2019-05-14 11:26 GMT   |   Update On 2019-05-14 11:26 GMT
ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நல்லா கவுண்டம்பட்டி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. கடும் வெயில் காரணமாக ஆள்துளை கிணற்றிலும் தண்ணீர் குறைந்து விட்டது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இங்கு மேட்டூர் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தண்ணீருக்கு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்று காலை குடிநீர் கேட்டு அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு காலி குடங்களுடன் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இருந்து பழையூர் செல்லும் சாலையில் முள் செடிகளை வெட்டி போட்டும், சிறிய கற்களை குறுக்காக போட்டும் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இன்னும் 2 நாட்களுக்குள் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

Tags:    

Similar News