செய்திகள்

துபாயில் கொத்தடிமையாக இருந்த வாலிபர் மீட்பு

Published On 2019-05-13 16:40 GMT   |   Update On 2019-05-13 16:40 GMT
துபாயில் கொத்தடிமையாக இருந்த வாலிபர் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசால் மீட்கப்பட்டார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தை அடுத்துள்ள சத்திரக்குடி அருகே உள்ளது அரியகுடி புத்தூர் கிராமம். இந்த ஊரைச்சேர்ந்தவர் அய்யாக்கண்ணு என்பவரது மகன் தங்கவேலு(வயது26). இவர் துபாய் நாட்டில் அலுவலக உதவியாளர் பணி என்று கூறிய ஏஜெண்டின் பேச்சை நம்பி அதற்கான தொகையை செலுத்தி துபாய் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே கூறியபடி அலுவலக உதவியாளர் பணி வழங்காமல் கட்டுமான பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். இரும்பு கம்பிகளை சுமக்கும் கடினமான வேலையை கொடுத்து சம்பளம் வழங்காமலும், கெட்டுப்போன உணவை கொடுத்து சாப்பிட சொல்லி கொத்தடிமைபோல நடத்துவதாக பெற்றோருக்கு வாட்ஸ்-ஆப்பில் கண்ணீர் மல்க வீடியோ அனுப்பியிருந்தார்.

இதனைக்கண்டு வேதனை அடைந்த பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மகனை மீட்டுத்தரக்கோரி தாய் ராமு அம்மாள் கண்ணீர் மல்க மனு கொடுத்தனர். உடனடியாக தன்னை மீட்காவிட்டால் கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று தனது மகன் வீடியோவில் பேசி அனுப்பி இருப்பதாக ராமு அம்மாள் தெரிவித்தார்.

இந்த மனு மீது உரிய விசாரணை நடத்திய கலெக்டர் வீரராகவராவ் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மத்திய அரசு மூலம் வாலிபர் தங்கவேலுவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அரசின் துரித நடவடிக்கையின் பயனாக துபாயில் கொத்தடிமையாக இருந்து அவதிப்பட்டு வந்த தங்கவேலு மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வாழ்வா? சாவா? என்று போராட்டம் நடத்தி வந்த வேளையில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுத்து தன்னை காப்பாற்றியதற்காக தங்கவேலு தனது குடும்பத்தினருடன் ராமநாதபுரம் வந்து கலெக்டர் வீரராகவராவை சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். 
Tags:    

Similar News