ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மரத்தில் மோதி பெண் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
நெல்லை மாவட்டம் சிவகிரியில் மாரிமுத்து என்பவர் இறந்து விட்டார். அவரது இறப்பை அறிந்து திருப்பூரில் இருக்கும் உறவினர்கள் துக்க வீட்டிற்கு செல்ல திருப்பூரிலிருந்து கார் மூலம் கிளம்பினர். காரை சரவணகுமார் (வயது 42) ஓட்டினார்.
காரில் சரவணகுமாரின் சகோதரர் சந்திரசேகர் (38) அவரது மனைவி சீதாலட்சுமி (33), ரஞ்சித் (10), அமிர்தா (7),மற்றும் கோதை நாச்சியார் (45), பாண்டீஸ்வரி (28), சேது அம்மாள் (65) ஆகியோர் இருந்தனர்.
இன்று காலை ஆம்னி கார் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் தனியார் கல்லூரி அருகே வரும் போது நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் காரில் வந்த அனைவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் சேது அம்மாள் (65) என்பவர் மட்டும் உயிரிழந்தார்.
காயமடைந்த அனைவரையும் கிருஷ்ணன் கோவில் போலீசார் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காலை 6½ மணி அளவில் நடைபெற்ற இந்த விபத்தினால் ஸ்ரீவில்லிபுத்தூர்- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணன் கோவில் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்னி காரை ஓட்டி வந்த சரவணகுமாரும், அவரது சகோதரர் சந்திரசேகரும் திருப்பூரில் டைனிங் நிறுவனம் நடத்துவதாக விசாரணையில் தெரியவந்தது.