செய்திகள்

ஜோலார்பேட்டை, கீழ்பென்னாத்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-05-06 17:49 IST   |   Update On 2019-05-06 17:49:00 IST
ஜோலார்பேட்டை மற்றும் கீழ்பென்னாத்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி சின்ன மண்டலவாடியில் 170 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 6 வாரமாக குடிநீர் சரிவர கிடைக்காததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். குடிநீர் வசதி வேண்டி பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவலறிந்த பி.டி.ஓ. கனகராஜ் மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தற்காலிகமாக டிராக்டர் மூலம் குடிநீர் வழங்குவதாக கூறினர். ஆனால் பொதுமக்கள் அதை ஏற்காமல் நிரந்தரமாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

10 நாளில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ஐங்குணம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 மாதகாலமாக குடிநீர் வினியோகிக்க படவில்லை.

இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறபடுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று சோமசபாடி- அவலூர்பேட்டை செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது எங்கள் பகுதியில் உடனடியாக குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் ஆவேசமாக கூறினர்.

சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News