செய்திகள்

கொடுமுடி அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 11 கொத்தடிமைகள் மீட்பு

Published On 2019-05-06 12:15 IST   |   Update On 2019-05-06 12:15:00 IST
கொடுமுடி அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 11 கொத்தடிமைகள் மீட்ட போலீசார், 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள மலையம்பாளையம் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட ஈஞ்சம் பள்ளியில் தனியாருக்கு சொந்தமான “பேப்பர் கோன்” தயார் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 11 பேரை திருச்செங்கோடு அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ஏஜெண்டாக இருந்து பேப்பர் கோன் நிறுவனத்தில் சேர்த்து விட்டாராம்.

இப்படி அந்த நிறுவனத்தில் சேர்க்கப்பட்ட 11 பேரையும் வெளியே விடாமல் சம்பளமும் சரியாக கொடுக்காமல் இருந்ததாக மொடக்குறிச்சி தாசில்தார் அரபுனிஷாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையில் ஊழியர்கள் அந்த தனியார் நிறுவனத்துக்கு சென்று விசாரித்து அங்கு கொத்தடிமைகளாக இருந்த 11 பேரையும் மீட்டனர்.

பிறகு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிய மொடக்குறிச்சி தாசில்தார் அவர்களை அவர்களின் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மொடக்குறிச்சி தாசில்தார் அரபுனிசா இது குறித்து கொடுமுடி போலீசில் புகார் செய்தார்.

இதுகுறித்து போலீசார் தனியார் நிறுவன உரிமையாளர் ஈரோடு மூலப்பாளையத்தைச் சேர்ந்த பிரசாத் சிவசேனன் ஏஜெண்டு சரவணன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News