செய்திகள்

வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பிய வாலிபர் கைது

Published On 2019-04-30 17:42 GMT   |   Update On 2019-04-30 17:42 GMT
வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த பொன்பரப்பியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினரிடையே மோதல் உண்டாகி கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்புபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் அண்மையில் எச்சரிக்கை செய்து இருந்தனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ஆனந்த்(வயது 25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்- அப்பில் ஒரு தரப்பு சமூகத்தினரை பற்றி மிரட்டும் வகையில் அவதூறாக வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த உதயநத்தம் கிராம நிர்வாக அதிகாரி கார்த்திக்கேயன், இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News