செய்திகள்

ராமநாதபுரம் அருகே பெரிய பட்டணத்தில் தொழில் அதிபர் வீட்டில் 31 பவுன் கொள்ளை

Published On 2019-04-25 11:02 GMT   |   Update On 2019-04-25 11:02 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டணத்தில் தொழில் அதிபர் வீட்டில் 31 பவுன் நகையை கொள்ளையடித்த டிரைவர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டணத்தில் உள்ள பிலால் நகரைச் சேர்ந்தவர் பசீர் என்ற சிங்கம் பசீர் (வயது 53). இவர் வெளிநாட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்து தொழில் செய்து வருகிறார்.

பெரிய பட்டணத்தில் இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. தனது டிரைவர் மர்சூக் அலி என்பவரிடம் வீட்டின் பொறுப்பை கவனித்துக் கொள்ளுமாறு சிங்கம் பசீர் கூறிவிட்டு வெளிநாட்டில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிங்கம் பசீர் சொந்த ஊருக்கு வந்தார். அவர் வந்த நாளில் இருந்து டிரைவர் மர்சூக் அலி மாயமானார். அவரை தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை.

இந்த நிலையில் வீட்டில் இருந்த பொருட்களை சரிபார்த்தபோது, பீரோவில் இருந்த 31 பவுன் நகை மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இது குறித்து விசாரித்ததில், மர்சூக் அலி நகையை திருடி விற்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக திருப்புல்லாணி போலீசில் சிங்கம்பசீர் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி மர்சூக் அலி மற்றும் உடந்தையாக இருந்த செய்யது அபுதாகீர், அசன் மைதீன், முகமது பயாஸ்கான், பைசல் சர்புதீன், பாசிக் அலி, சாகுல் அமீது, சுலைமான் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News