செய்திகள்

ஈரோடு அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் ஜெயிலில் அடைப்பு

Published On 2019-04-17 13:25 GMT   |   Update On 2019-04-17 13:25 GMT
ஈரோடு அருகே வீட்டை என் பெயருக்கு எழுதி வைக்காததால் தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

ஈரோடு:

ஈரோடு நாராயண வலசு, வாய்க்கால் மேடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவரது மனைவி கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் நாராயணமூர்த்தி (39). திருமணமாகவில்லை. மகள் தங்கமணி (36) திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

ராமசாமி மகன் நாராயணமூர்த்தி மகள் தங்கமணி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். நாராயணமூர்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் அவ்வப்போது வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபடுவாராம். மேலும் நாராயணமூர்த்தி தனது தந்தையிடம் வீட்டை எனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு அவரது தந்தை ராமசாமி மறுத்து விட்டார். நேற்று முன்தினம் அவர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ராமசாமி தனது பெயரில் உள்ள வீட்டை தனது மகள் தங்கமணிக்கு எழுதி வைப்பதாக கூறினார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த நாராயணமூர்த்தி வீட்டில் இருந்த இரும்பு ஊதுகுழல் மற்றும் கட்டையால் ராமசாமியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த ராமசாமி உயிருக்காக போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கமணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உயிருக்கு போராடிய ராமசாமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராமசாமியின் மகள் தங்கமணி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார்.

அதன்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து நாராயணமூர்த்தியை கைது செய்தனர்.

அப்போது அவர் கூறும்போது சம்பவத்தன்று வீட்டை எனது பெயருக்கு எழுதி வைக்குமாறு என் தந்தையிடம் கேட்டேன். அதற்கு அவர் மறுத்து என்னை உதாசீனப்படுத்தினார். எனது வீட்டை உனது பெயருக்கு எழுதி கொடுக்க மாட்டேன் எனது மகள் தங்கமணி பெயரில்தான் எழுதி வைப்பேன். நீ குடித்து குடித்து விட்டை அழித்து விடுவாய் என்றார். இதனால் ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த இரும்பு ஊதுகுழலை எடுத்து தந்தையை தாக்கினேன். மேலும் அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரை அடித்தேன்.

இவ்வாறு நாராயண மூர்த்தி போலீசில் வாக்கு மூலமாக தெரிவித்தார். இதையடுத்து நாராயண மூர்த்தியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Tags:    

Similar News