செய்திகள்

மதுரை சித்திரை திருவிழா - தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 7,500 போலீசார்

Published On 2019-04-09 10:11 GMT   |   Update On 2019-04-09 10:11 GMT
மதுரை சித்திரை திருவிழா மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார். #ChithiraiThiruvizha #LokSabhaElections2019
மதுரை:

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 18-ந் தேதியும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் 19-ந் தேதியும் நடைபெற உள்ளது.

சித்திரை தேரோட்டம் நடைபெறும் அன்று தான் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. எனவே பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க மதுரை நகரம் போலீஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் 7,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் 314 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 141 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சிரமம் இன்றி சென்று வர மதுரை காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சித்திரை திருவிழா நடைபெறும் 4 மாசி வீதிகள், எதிர்சேவை வழித்தடங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் மரத்தாலான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. #ChithiraiThiruvizha #LokSabhaElections2019



Tags:    

Similar News