ஊத்துக்கோட்டை அருகே கோடை வெயிலுக்கு பெண் பலி
ஊத்துக்கோட்டை:
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஊத்துக்கோட்டை பகுதியில் தாங்க முடியாத அளவு வெயில் கொளுத்துகிறது. இதனால் மக்கள் பெருமளவு அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பெண் ஒருவர் வெயில் கொடுமை தாங்காமல் உயிர் இழந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆலபாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி சரோஜா (68). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 30-ந் தேதி காணாமல் போனார். உறவினர்கள் இவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சரோஜா தேவந்தவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வெயில் கொடுமை தாங்காமல் அவர் திடீர் என்று சுருண்டு விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜா உயிரிழந்தார்.