செய்திகள்
அவனியாபுரத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு
அவனியாபுரத்தில் பெண்ணிடம் நகையை பறித்து சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அவனியாபுரம்:
மதுரை அவனியாபுரம் மாநகராட்சி காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் பாலுத்தாய் (வயது 35). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பாலுத்தாயை பின்தொடர்ந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது மர்ம நபர்கள் பாலுத்தாயை சரமாரியாக தாக்கி கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நகை பறிப்பு சம்பவம் நடந்த இடத்தில் சி.சி.டி.வி. கேமிரா இருப்பது கண்டறியப்பட்டது. அதனை ஆய்வு செய்தபோது நகை திருடர்களின் காட்சி பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் 3 பேரையும் தேடி வருகிறார்கள்.