செய்திகள்

ஏம்பலம் அருகே சாராயத்தில் எலி மருந்து கலந்து குடித்து விவசாயி தற்கொலை

Published On 2019-03-28 16:55 GMT   |   Update On 2019-03-28 16:55 GMT
ஏம்பலம் அருகே சாராயத்தில் எலி மருந்து கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

ஏம்பலம் அருகே மேல் சாத்தமங்கலம் தேனீபன் நகரை சேர்ந்தவர் எத்திராஜ் (வயது 42). விவசாயி. இவர் ஏற்கனவே குடும்ப செலவுக்கு பணம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த கடனை திருப்பி கொடுக்காத எத்திராஜ் தனது மனைவி வள்ளிக்கு தெரியாமல் மேலும் சிலரிடம் பணம் கடன் வாங்கினார். 

இதனை அறிந்த வள்ளி சம்பவத்தன்று கணவரை கண்டித்தார். இதனால் மனமுடைந்த எத்திராஜ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சம்பவத்தன்று எலி மருந்தை வாங்கி கொண்டு அருகில் உள்ள சாராயக்கடைக்கு சென்றார். அங்கு சாராயத்தில் எலி மருந்தை கலந்து குடித்தார். 

இதில் சாராயக்கடையிலேயே எத்திராஜ் மயங்கி விழுந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் எத்திராஜை மீட்டு கரிக்க லாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். 

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை எத்திராஜ் பரிதாபமாக இறந்து போனார். 

இது குறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News