செய்திகள்
நைனார் மண்டபத்தில் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை
நைனார் மண்டபத்தில் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
நைனார் மண்டபம் இந்திராநகரை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 60). இவர்களுக்கு சுதாகர் (42) என்ற மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனபால் இறந்து விட்டார். இதனால் மகாலட்சுமி தனது மகன் பராமரிப்பில் வசித்து வந்தார்.
இதற்கிடையே மகாலட்சுமிக்கு ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், நீரிழிவு நோய் காரணமாக மகாலட்சுமி தினம், தினம் அவதி அடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மகாலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரம் கழித்து சுதாகரின் மகன் அரவிந்த், மகள் வள்ளி ஆகியோர் வீட்டுக்கு வந்தபோது அங்கு பாட்டி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து மகாலட்சுமியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகாலட்சுமி இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரசாமி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.