செய்திகள்

தமிழக மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

Published On 2019-03-27 21:45 IST   |   Update On 2019-03-27 21:45:00 IST
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் சுமார் 180 விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 3 விசைப்படகில் சென்ற அதே ஊரை சேர்ந்த பிரசாந்த் (வயது 25), கலைமணி (39), சக்தி (45), விஜயசுந்தர் (25), பிரேம்குமார் (25), தினேஷ் (26), பன்னீர்செல்வம் (27), முத்து (50), சந்திரன் (40), கணேசன் (48), முருகன் (32) ஆகிய 11 மீனவர்களும் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 மீனவர்களையும் கைது செய்து, அவர்களது 3 விசைப்படகினையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 11 மீனவர்களையும் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மீனவ சங்க நிர்வாகிகள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நம் இந்திய எல்லையில் மீன்பிடிக்கும்போதே அவர்கள் (இலங்கை) எல்லையில் மீன்பிடிப்பதாக கூறி மீனவர்களை கைது செய்கின்றனர். இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். அப்போது தான் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க முடியும். பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது கைது செய்த 11 மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
Tags:    

Similar News