ஆலங்குப்பத்தில் வீடு கட்டும் பிரச்சினையில் மோதல் - 5 பேர் காயம்
புதுச்சேரி:
கோரிமேடு அருகே ஆலங்குப்பத்தை சேர்ந்தவர் குலசேகரன் (வயது52). இவர் ஆரோவில்லில் பூங்கா காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டும் பணியை தொடங்கினார். இதற்கு பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜா என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். தனக்கு சொந்தமான இடத்தில் குலசேகரன் வீடு கட்டுவதாக ராஜா தகராறு செய்து வந்தார்.
நேற்று இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜா அவரது மனைவி மனோன்மணி மற்றும் உறவினர்கள் சேர்ந்து குலசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர்.
இதில் குலசேகரன், அவரது மனைவி மற்றும் மகன் திவான், அண்ணன் மகள் செல்வி உள்ளிட்ட 5 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து குலசேகரன் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் விசாரணை நடத்தி ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர்.