செய்திகள்

கூத்தாநல்லூர் அருகே தேர்தல் பறக்கும் படை கேமிராமேன் விபத்தில் பலி

Published On 2019-03-21 16:30 GMT   |   Update On 2019-03-21 16:30 GMT
கூத்தாநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கல்லூரி பஸ் மோதிய விபத்தில் தேர்தல் பறக்கும் படை கேமிராமேன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கூத்தாநல்லூர்:

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி மெயின் ரோட்டு தெருவை சேர்ந்தவர் செய்யதுபாரூக் (வயது37). இவர் கூத்தாநல்லூரில் உள்ள ஸ்டூடியோவில் பணியாற்றி வந்தார். தற்போது தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் கேமிராமேன் பணியில் ஈடுபட்டு வந்தார். 

இந்த நிலையில் நேற்று கூத்தாநல்லூரில் தேர்தல் பறக்கும் படை பணிக்காக தனது மோட்டார் சைக்கிளில் செய்யது பாரூக் சென்று கொண்டிருந்தார். சேகரை என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்ற தனியார் கல்லூரி பஸ்சை கடந்து சென்ற போது பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ்சின் பின்பக்க டயரில் விழுந்த செய்யதுபாரூக் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செய்யது பாரூக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கல்லூரி பஸ்சை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான செய்யதுபாரூக்கிற்கு மும்தாஜ்பேகம் என்ற மனைவியும், நூருன்னிஷா , பைரோஸ்ஜெகபர் நாச்சியா, ராபியத்துல்பஜ்ஜிரியா, நூரூல்ரிஸ்வானா ஆகிய 4 மகள்கள் உள்ளனர்.
Tags:    

Similar News