செய்திகள்

திருமங்கலம் அருகே லாரி மீது கார் மோதல்- காரைக்குடி பெண் பலி

Published On 2019-03-21 12:35 GMT   |   Update On 2019-03-21 12:35 GMT
திருமங்கலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் குலதெய்வம் கோவிலுக்குச் சென்ற பெண் பலியானார்.

பேரையூர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோவிலூரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கண்மணி (வயது 38). பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு இவர் தனது உறவினர்களான காளியம்மாள் (50), சொர்ணலதா, வள்ளியப்பன், செந்தில்வேல், சேகர் ஆகியோருடன் நெல்லை மாவட்டம், களக்காட்டில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட காரில் புறப்பட்டார்.

கார் இன்று அதிகாலை திருமங்கலம் அருகே சமத்துவபுரம் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. காருக்கு முன்னால் சிமெண்ட் பாரம் ஏற்றிய லாரி சென்றது.

லாரியை டிரைவர் திடீரென்று பிரேக் போட்டு நிறுத்தினார். லாரி மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் காரை நிறுத்த முயன்றார். அவரது முயற்சிக்கு பலன் இல்லை.

லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காரில் பயணம் செய்த கண்மணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 5 பேரும் படுகாயமடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News