செய்திகள்

வத்தலக்குண்டுவில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு

Published On 2019-03-20 09:53 GMT   |   Update On 2019-03-20 09:53 GMT
வத்தலக்குண்டு பகுதியில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவதில்லை என்பதால் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது. #PlasticBan
வத்தலக்குண்டு:

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க, விற்பனை செய்ய, பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்களை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வத்தலக்குண்டு பகுதியில் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு காரணமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு பெருமளவில் குறைந்தது. சிறுவியாபாரிகளும் மாற்றுப்பொருட்களை பயன்படுத்தினர்.

ஆனால் அதன்பின்னர் அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவதில்லை. இதனால் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.

சுற்றுலா இடங்களுக்கு செல்ல வத்தலக்குண்டு முக்கிய சந்திப்பு என்பதால் அதிகளவு பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களும் பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்துவது இல்லை. ஆனால் அதிகாரிகள் கண்காணிப்பு குறைந்ததால் வியாபாரிகள் மீண்டும் பிளாஸ்டிக் கப், கவர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதனால் பஸ் நிலையம் அருகே பிளாஸ்டிக் குப்பைகள் குவியத்தொடங்கியுள்ளன. பெரும்பாலான தெருக்களில் உள்ள சாக்கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்து நிற்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையிலேயே தேங்கி நிற்கிறது.

எனவே துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் ரோந்து பணியை மீண்டும் தீவிரப்படுத்தி பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சிறுவியாபாரிகளை குறிவைக்காமல் மொத்தமாக தயாரிக்கும் தொழில் அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். #PlasticBan

Tags:    

Similar News