காசோலை மோசடி வழக்கு- வாலிபருக்கு ஓராண்டு சிறை
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் கோவிந்தராஜ் மகன் ஜெயபால் (வயது 39) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டில் காசோலை மோசடி வழக்கினை சந்திரராஜா என்பவர் மீது பதிவு செய்தார்.
வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேல் சந்திரராஜா நீதி மன்றத்திற்கு வராத நிலையில் அவருக்கு பிடிவாரண்ட் போடப்பட்டது. பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. கணேசமூர்த்தி கோர்ட்டின் உத்தரவின் பேரில் சந்திரராஜாவை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
இதையடுத்து பட்டுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்ற நீதிபதி சத்தியகுமார் இந்த வழக்கை விசாரித்து பட்டுக்கோட்டை பண்ணவயல் ரோடு பகுதியை சேர்ந்த மன்னர்மன்னன் மகன் சந்திரராஜாவுக்கு காசோலை மோசடி வழக்கில் ஒருவருடம் சிறைதண்டனை மற்றும் காசோலை கொடுத்து ஏமாற்றிய தொகை 25 லட்சம் ரூபாயை ஒருமாதத்தில் கட்ட வேண்டும் என்றும், அவ்வாறு கட்ட தவறினால் மேலும் மூன்றுமாதம் சிறைதண்டனை வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.