செய்திகள்

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ

Published On 2019-03-08 17:09 IST   |   Update On 2019-03-08 17:09:00 IST
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக அரிய வகை மரங்கள் எரிந்து நாசமானது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியையொட்டி உள்ளது கடம்பூர் வனப்பகுதி.

இப்பகுதியில் உள்ள கம்பத்ராயன் கிரி வனத்தில் நேற்று மாலை 6 மணியளவில் புகையாக கிளம்பியது. போக போக காட்டுத்தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.

அப்போது காற்றும் வேகமாக வீசியதால் தீ பரவலாக பற்றி எரிந்தது. இது பற்றி அப்பகுதி பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் வந்தனர். அவர்கள் பொது மக்களுடன் சேர்ந்து தீயை அணைக்க முயன்றனர். எனினும் தீயை அணைக்க முடியாமல் போராடி வருகிறார்கள்.

விடிய-விடிய எரிந்த தீ இன்று காலையும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. 2-வது நாளாக பொது மக்களும், வனத்துறையினரும் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகிறார்கள்.

இந்த காட்டு தீயால் வனப்பகுதியில் உள்ள சந்தன மரம் வில்வமரம், மூங்கில் மரம் போன்ற அரிய வகை மரங்கள் பல எரிந்து சாம்பலாகி விட்டன. பற்றி எரியும் தீயில் வனக்குழுவினர் இலை, தழைகளை போட்டும் அவற்றால் அடித்தும் தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

Similar News