செய்திகள்

ஈரோட்டில் 300 வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

Published On 2019-03-08 16:57 IST   |   Update On 2019-03-08 16:57:00 IST
விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் 300 வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு:

ஈரோடு, கரூர், சேலம், கோவை உள்பட 13 மாவட்ட விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க இப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இங்கு உயர் மின் கோபுரம் அமைத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி 13 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள படை வீடு என்னும் பகுதியில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்து வருகிறது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்கள் மற்றும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற முடிவு செய்தனர்.

அதன்படி இன்று 13 மாவட்ட விவசாயிகள் தங்களது விளை நிலங்கள் மற்றும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தை பொருத்த வரை மூலக்கரை மேட்டுக்கடை முதலி கவுண்டன் வலசு, இனைய கவுண்டன்பாளையம் , கதிரம் பட்டி பென்னங்காட்டு வலசு, உட்பட 30 கிராமங்களை சேர்ந்த 300 வீடுகள் - டவர் லைன் சொல்லும் விவசாய விளை நிலங்களில் கருப்பு கொடிகளை கட்டி விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 

Similar News