செய்திகள்

பெண்ணாடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து - விவசாயி பலி

Published On 2019-03-06 18:02 GMT   |   Update On 2019-03-06 18:02 GMT
பெண்ணாடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி இறந்தார். தலைமைஆசிரியர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
பெண்ணாடம்:

அரியலூர் மாவட்டம் கீழமாளிகை கிராமத்தை சேர்ந்தவர் ராசக்கண்ணு(55), விவசாயி. இவர் நேற்று தனது தம்பி ஜெயவேலுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் மதகளிர்மாணிக்கத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் பெண்ணாடம் அடுத்த பெரியகொசப்பள்ளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, பெண்ணாடத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், ராசக்கண்ணு, ஜெயவேல் ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.

இதில் ராசக் கண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயவேல், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்த கலைமணி(35), திருமலை அகரத்தை சேர்ந்த மலைச்செல்வன்(49) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் பலியான ராசக்கண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த மலைச்செல்வன் நெய்வாசல் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
Tags:    

Similar News