செய்திகள்

காட்பாடி அருகே ரெயிலில் பெண்ணிடம் 10 பவுன் நகை கொள்ளை

Published On 2019-03-05 11:34 GMT   |   Update On 2019-03-05 11:34 GMT
காட்பாடி அருகே சிக்னலுக்காக ரெயில் நின்ற போது பெண்ணிடம் 10 பவுன் தங்க செயினை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
வேலூர்:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மனைவி மகேஸ்வரி (43), மகன் விமல் ஆகியோர் திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டனர். நேற்று இரவு கேரளாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சேலத்தில் ஏறினர்.

முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த அவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணிக்கு காட்பாடி அருகே உள்ள கரசமங்கலம் என்ற இடத்தில் சிக்னலுக்காக ரெயில் நின்றது.

அப்போது மர்ம நபர்கள் தூங்கி கொண்டிருந்த மகேஸ்வரி அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்தனர். திடுக்கிட்டு கண்விழித்த மகேஸ்வரி கூச்சலிட்டார்.

பயணிகள் கொள்ளையர்களை விரட்டினர். அதற்குள் செயினை பறித்த கொள்ளையர்கள் ரெயில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர். இதனால் பயணிகள் பீதியடைந்தனர்.

காட்பாடி வந்ததும் ரெயில்வே போலீசில் மகேஸ்வரியின் மகன் விமல் புகார் அளித்தார். சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது.

இதையடுத்து புகார் மனு ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News