செய்திகள்
நெய்வேலியில் டாஸ்மாக் சூப்பர் வைசரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
நெய்வேலியில் இலவசமாக மது கொடுக்க மறுத்த டாஸ்மாக் சூப்பர் வைசரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி:
நெய்வேலி புதுநகர் 21-வது வட்டத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சூப்பர் வைசராக வடக்குவெள்ளூர் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு 9 மணியளவில் வெங்கடேசன் கடையில் பணியில் இருந்தார். அப்போது கொள்ளிருப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பவர் மது குடிக்க வந்தார்.
அங்கிருந்த வெங்கடேசனிடம், தனக்கு இலவசமாக மது கொடுக்கும்படி கேட்டார். அதற்கு வெங்கடேசன் மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து வெங்கடேசன் நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடை சூப்பர்வைசருக்கு கொலை மிரட்டல் விடுத்த சுரேசை கைது செய்தார்.