செய்திகள்
போடி சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் பலத்த மழை
போடி சுற்று வட்டார பகுதியில் இடியுடன் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. எனவே இந்த பகுதி எப்போதும் இதமான சூழ்நிலை காணப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் மானாவாரி விவசாயம் சரிவர இல்லை. இந்த பகுதியில் ஏராளமான மாந்தோப்புகள் மற்றும் மானாவாரி நிலங்கள் உள்ளது. இதில் தற்போது மொச்சை சாகுபடி செய்து உள்ளனர்.
எனவே எப்போது மழை பெய்யும் என்று ஏங்கி இருந்த வேளையில் நேற்று மாலை இடியுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சிலமலை, சில்லமரத்துப்பட்டி, குரங்கணி, கோடாங்கிபட்டி மற்றும் சுற்றி உள்ள பகுதியிலும் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மா சாகுபடி விவசாயிகள் கூறுகையில் மாமரங்களில் தற்போது பிஞ்சுகள் இறங்கி உள்ளது. இந்த மழை மா விளைச்சலுக்கு ஏற்றதாக அமைந்ததாக உள்ளது என்றனர்.