செய்திகள்

புவனகிரி அருகே கார் மோதி 6-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2019-03-02 12:02 IST   |   Update On 2019-03-02 12:02:00 IST
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கார் மோதிய விபத்தில் 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரி:

கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். விவசாயி. இவரது மகன் மகேந்திரன் (வயது 12).

இவன் புவனகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை புவனகிரி அருகே உள்ள மேலமணக்குடி தபால் நிலையம் அருகே மகேந்திரன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான்.

அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மகேந்திரனின் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மகேந்திரன் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மகேந்திரனை மீட்டு புவனகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே மகேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News