செய்திகள்
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் - டிரைவர் கைது
திருவாரூர் அருகே அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றிவந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின்படி மணல் திருட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் சோதனை நடத்தப்பட்டு மணல் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் திருவாரூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையில் போலீசார் பவித்திரமாணிக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் மறித்து சோதனை மேற்கொண்டனர். அதில் அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து குடவாசல் பூங்காவூரை சேர்ந்த டிரைவர் மாரிமுத்துவை (வயது 25) கைது செய்தனர்.