செய்திகள்

திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-02-26 11:05 GMT   |   Update On 2019-02-26 11:05 GMT
திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள குறிசிலாப்பட்டு பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த பல மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர்-ஆலங்காயம் செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டு முறையாக குடிநீர் வினியோகம் செய்யவேண்டும் என்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்

இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News