செய்திகள்

திருப்பூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

Published On 2019-02-18 12:02 GMT   |   Update On 2019-02-18 12:02 GMT
திருப்பூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
திருப்பூர்:

திருப்பூர் கொங்கு மெயின்ரோடு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகில் செல்போன் கோபுரம் ஒன்று உள்ளது. இந்த கோபுர உச்சியில் ஏறிய ஒரு வாலிபர் திடீர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கு கூடி வாலிபரை இறங்குமாறு கூறினர். ஆனால் வாலிபர் இறங்க மறுத்து குதிக்க போவதாக தொடர்ந்து கூறினார்.

இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் வாலிபரின் நண்பர்கள் மூலம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவரை சமாதானம் செய்ய முடியவில்லை.

இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

வீரர்கள் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி, அந்த வாலிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து வாலிபர் இறங்க தொடங்கினார். தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டனர். வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் உடுமலையை சேர்ந்த சபீர் (வயது 25) என்பதும், அவர் திருப்பூர் கொங்குமெயின் ரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து அந்த பகுதியில் பிரிண்டிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News