செய்திகள்
அசோக்நகர் துணிக்கடையில் பட்டு புடவைகளை நூதன முறையில் திருடிய பெண்கள்
அசோக்நகர் துணிக்கடையில் பட்டு புடவைகளை நூதன முறையில் திருடிய பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
போரூர்:
எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவர் அசோக் நகர் 10-வது அவின்யூவில் துணிக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை 4 பெண்கள் கடைக்கு வந்து பெண் ஊழியரிடம் விலை உயர்ந்த பட்டு புடவைகளை காட்ட சொல்லி பார்த்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து புடவை வாங்காமல் சென்று விட்டனர்.
அப்போது அங்கிருந்த புடவைகளை பெண் ஊழியர் அடுக்கியபோது 16 பட்டு புடவைகள் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இதுகுறித்து குமரன் நகர் போலீசில் உரிமையாளர் கோபால் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில் பெண்கள் தங்களது ஆடைக்குள் பை தைத்து அதில் சேலைகளை வைத்து நூதனமான முறையில் திருடி சென்றது தெரிந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.