செய்திகள்

தாய் கண்டித்ததால் வி‌ஷம் குடித்த அண்ணன்- தம்பி சிகிச்சை பலனின்றி பலி

Published On 2019-02-11 13:42 GMT   |   Update On 2019-02-11 13:42 GMT
கும்பகோணத்தில் பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் வி‌ஷம் குடித்த அண்ணன்- தம்பி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியை சேர்ந்தவர் கருப்பையன். இவருடைய மனைவி அம்முனி. இவர்களது மகன்கள் ஆகாஷ் (வயது 13), ஹரிஸ் (11). அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆகாஷ் 8-ம் வகுப்பும், ஹரிஸ் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தனர். ஆதலால் அம்முனி, இருவரையும் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஆகாஷ் மற்றும் ஹரிஸ் ஆகிய 2 பேரும் வீட்டில் வைத்திருந்த பூச்சிமருந்தை (வி‌ஷம்) குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தீவிர சிகிச்சை அளித்தும் அவர்கள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News