தஞ்சையில் திமுக பிரமுகர் வீட்டில் ரூ.7 லட்சம் கொள்ளை
தஞ்சாவூர்:
தஞ்சை கீழஅலங்கம் சாமந்தான்குளம் பகுதியை சேர்ந்த பத்மநாபன் மகன் விஜய் (வயது34). இவர் தி.மு.க. நகர இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார்.
சம்பவத்தன்று விஜய் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.10 லட்சத்தில் 7 லட்சத்தை கொள்ளையடித்தனர். மீதி 3 லட்சத்தை பீரோவில் வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த நிலையில் காலையில் விஜய் எழுந்தபோது பீரோ திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த பணத்தை காணாதது கண்டு திடுக்கிட்டார்.
இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் பூபதியின் தம்பி மகன் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.