செய்திகள்

பட்டப்பகலில் டீக்கடையில் இருந்த பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

Published On 2019-02-07 12:01 GMT   |   Update On 2019-02-07 12:01 GMT
டீக்கடையில் இருந்த பெண்ணிடம் பட்டப்பகலில் 7 பவுன் செயினை பறித்துச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை சிலைமான் அருகில் உள்ள புளியங்குளம் எல்.கே.டி. நகரைச் சேர்ந்த அய்யப்பன் மனைவி தனலட்சுமி (வயது54). இவர் மதுரை-ராமநாதபுரம் ரோட்டில் தனியார் மில் அருகே டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில 2 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் தனலட்சுமியிடம் டீ வாங்கி குடித்து விட்டு காசு கொடுத்தனர்.

இதையடுத்து தனலட்சுமி கல்லாவில் சில்லரை எடுப்பதற்காக திரும்பினார். அப்போது மர்ம வாலிபர்கள் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

இதுதொடர்பாக தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் பெண் ஒருவரிடம் வழிப்பறி கொள்ளையர்கள் 7 பவுன் செயினை பறித்து சென்ற சம்பவம் சிலைமான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News