செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 17.68 லட்சம் வாக்காளர்கள் - இன்று பட்டியல் வெளியீடு

Published On 2019-01-31 10:19 GMT   |   Update On 2019-01-31 10:19 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் 17.68 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வினய் வெளியிட்டார்.
திண்டுக்கல்:

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் வினய் வெளியிட்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல் மற்றும் ஒரே தொகுதிக்குள் இடம் மாற்றம் செய்தலுக்காக கடந்த 1.9.2018 முதல் 31.10.2018 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைகளின்படி 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கல்வி நிறுவனத்தையும் தேர்தல் பணியாளர்கள் நேரடியாக அணுகி தகுதியுள்ள அனைத்து மாணவ-மாணவிகளையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தனர். இதனால் 18 முதல் 19 வயதுடைய 16 ஆயிரத்து 827 பேர் இளைய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 17.68 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் நிலையில் தீவிர ஆய்வு செய்து மாவட்டத்தில் 6 ஆயிரத்து 46 மாற்றுத் திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை சேர்க்கப்படாத தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் யாரும் இருந்தால் 1950 என்ற கட்டணம் இல்லா தொலைபேசியில் தகவல் கொடுத்தால் வீட்டிற்கே சென்று நிலை அலுவலர் உரிய படிவத்தில் மனுவை பெற்று நடவடிக்கை எடுப்பார்.

வாக்காளர் பட்டியலில் உள்ள புகார்களை தெரிவிப்பதற்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மனோகர், கலெக்டரின் உதவியாளர் ராஜ்குமார், தேர்தல் வட்டாட்சியர் சுப்பிரமணிய பிரசாத் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News