செய்திகள்

வேட்டவலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-01-25 23:12 IST   |   Update On 2019-01-25 23:12:00 IST
வேட்டவலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேட்டவலம்:

வேட்டவலத்தை அடுத்த வைப்பூர் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள சிறிய குடிநீர் தொட்டிகளின் மோட்டார்கள் பழுதடைந்து உள்ளன. பல மாதங்களாகியும் இதனை சீரமைக்கவில்லை. மேலும் தென்பெண்ணை ஆற்றில் இருந்து வரும் குடிநீர் குழாயும் பழுதடைந்துள்ளதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதுபற்றி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை 7 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள சாலையில் காலிக்குடங்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, சப்–இன்ஸ்பெக்டர்கள் அலெக்ஸ், கருணாநிதி, முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குடிநீர் தொட்டியின் மோட்டார்கள் சரி செய்யப்படும் என்றும் கூறினர்.

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News