2-வது நாளாக ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்- மீன்களின் விலை உயர்வு
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடந்த வாரம் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 18 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் ரோந்து கப்பல்களையும், மீனவர்களின் படகுகள் மீது மோதச்செய்தது.
இந்த விபத்தில் முனியசாமி என்ற மீனவர் கடலில் விழுந்து இறந்தார். இலங்கை கடற்படையினரின் இந்த செயலை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று (15-ந் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றும் 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடருகிறது. இதன் காரணமாக 500-க்கும் மேற்பட்ட படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. 5,000 மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. நாட்டுப் படகு மீனவர்கள் மட்டுமே மீன் பிடிக்கச் செல்வதால் மீன் வரத்து குறைவாக இருந்தது. இதனால் மீன் விலை சற்று உயர்ந்துள்ளது.
பொங்கலைத் தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் மீனுக்கு அதிக தேவை உள்ளது. ஆனால் தற்போது ராமேசுவரத்தில் வேலை நிறுத்தம் நடந்து வருவதால் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது.