செய்திகள்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு- வேதாரண்யம் தாசில்தார் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-01-14 09:27 GMT   |   Update On 2019-01-14 09:27 GMT
வேதாரண்யம் தாசில்தார் வருகிற பிப்ரவரி 1-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
சென்னை:

நாகப்பட்டினம் மாவட்டம், கடினல்வயல் பஞ்சாயத்து தலைவராக இருந்த டி.மலர்விழி, தாக்கல் செய்துள்ள கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கூறியிருப்பதாவது:

குஜராத் ஹெவி கெமிக்கல் நிறுவனம், கடினல் வயல் பஞ்சாயத்துக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, கடந்த 2003-ம் ஆண்டு முதல் உப்பளம் நடத்தி வருகிறது.

இந்த நிலத்தை மீட்டுத் தருமாறு பொதுமக்கள் சார்பிலும், பஞ்சாயத்து சார்பிலும் மாவட்ட கலெக்டர் முதல் உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பிலும், பஞ்சாயத்து சார்பிலும் பல மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனுமதி இல்லாமல் நிலத்தில் உப்பளம் நடத்துவதால் பஞ்சாயத்துக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

புறம்போக்கு நிலம் பயன்படுத்துவோர் வரி கட்டணம் விதிகளின்படி, புறம்போக்கு நிலத்தை பயன்படுத்துவோரிடம் வரி வசூலிக்கலாம். அதன்படி, கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்திடம் இருந்து வரி வசூலிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை மனு பல அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘குஜராத் ஹெவி கெமிக்கல் நிறுவனம், பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்தி வருவது குறித்து வேதாரண்யம் தாசில்தார் ஆய்வு செய்து, அந்த நிறுவனத்துக்கு விதிக்கவேண்டிய வரியை கணக்கிட்டு, அதுகுறித்து அறிக்கையை மாவட்ட கலெக்டருக்கு 6 வாரத்துக்குள் அனுப்பிவைக்கவேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் வரி வசூலிக்கவேண்டும்’ என்று கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது.

ஆனால், இதுவரை இந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. எனவே, வேண்டும் என்றே உத்தரவை அமல்படுத்தாமல் இருக்கும் நாகப்பட்டினம் கலெக்டர், வேதாரண்யம் தாசில்தார் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.முருகபாரதி ஆஜராகி, ‘வேதாரண்யம் தாசில்தாரர் ஏற்கனவே இரு முறை சரியான ஆய்வுகள் செய்து அறிக்கை தாக்கல் செய்யவில்லை. வரி தொகையை குறைத்து மதிப்பிட்டுள்ளார்’ என வாதிட்டார்.

இதையடுத்து, வேதாரண்யம் தாசில்தார் வருகிற பிப்ரவரி 1-ந்தேதி நேரில் ஆஜராகி, அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். #MadrasHC
Tags:    

Similar News