செய்திகள்

வருவாய்த்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் - பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணிகள் பாதிப்பு

Published On 2019-01-08 12:29 GMT   |   Update On 2019-01-08 12:29 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, வராக்கடன்களை வசூலிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் வங்கி, தொலைதொடர்பு ஊழியர்கள் சங்கத்தினர் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் ஊழியர்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. அரண்மனை மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்தன.

ராமநாதபுரத்தில் வழக்கம்போல் பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த வேலை நிறுத்தத்தில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பங்கேற்றனர். மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களிலும் வருவாய் அலுவலர்கள் பணிக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதில் 170 பெண்கள் உள்பட 542 பேர் பங்கேற்றுள்ளதாக மாவட்ட தலைவர் பழனிக்குமார் தெரிவித்தார்.

வருவாய்த்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மாவட்டத்தில் அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள இந்த வேலை நிறுத்தத்திற்கு தமிழகத்தில் போதிய ஆதரவு இல்லை. மதுரையில் இன்று வழக்கம்போல் அனைத்து பஸ்கள் இயங்கின.

அஞ்சல்துறை, காப்பீட்டுத்துறை, வருமான வரித்துறை, தொலை தொடர்புத்துறை உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட துறைகளின் பணிகள் பாதிக்கப்பட்டன. மதுரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி சில இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் வழக்கம் போல் பஸ்கள் ஓடின. வேலை நிறுத்தத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் தபால் அலுவலகங்கள் செயல்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும்பாலான வங்கி ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக வங்கி பணிகள் பாதிக்கப்பட்டன. பண பரிவர்த்தனை முற்றிலும் முடங்கியது.

இன்றும் நாளையும் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டதால் ரூ.150 கோடி அளவுக்கு வர்த்தகங்கள் பாதிக்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர். #tamilnews
Tags:    

Similar News