செய்திகள்

பண்ருட்டியில் தேமுதிக நிர்வாகிக்கு கத்திக்குத்து- என்ஜினீயர் கைது

Published On 2019-01-04 14:38 GMT   |   Update On 2019-01-04 14:38 GMT
முன்விரோத தகராறில் தேமுதிக பிரமுகரை கத்தியால் குத்திய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகிறார்கள்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்தவர் அனந்தராமன் (வயது 42). தே.மு.தி.க. பிரமுகர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராம்கி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராம்கி மற்றும் அவரது நண்பர் நெய்வேலியை சேர்ந்த என்ஜினீயர் விஷ்னு(21). உள்பட 7 பேர் அன்ந்தராமனின் வீட்டிற்க்கு சென்றனர். பின்னர் அங்கு இருந்த அனந்தராமனை, ராம்கி தகாத வார்த்தைகளால் திட்டினார். இதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து ராம்கி அவரது நண்பர்களுடன் சேர்ந்து அனந்தராமனை இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அனந்தராமனை சரமாரியாக குத்தினர். கத்திக்குத்தில் தலை மார்பு உள்பட பல்வேறு இடங்களில் அனந்தராமன் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அதன் பின்னர் ராம்கி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 

படுகாயம் அடைந்த அனந்தராமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனந்தராமனை அனுப்பி வைத்தனர். 

இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் அனந்தராமன் புகார் செய்தார். அதன் பேரில் ராம்கி மற்றும் நெய்வேலியை சேர்ந்த அவரது நண்பர்கள் என்ஜினீயர் விஷ்னு, ராஜதுரை, சாமிதுரை, ரஜினி, அருண்குமார், மகேஸ்வரன், ஆகிய 7 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குபதிவு செய்து விஷ்னுவை கைது செய்தார். மற்ற 6 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.
Tags:    

Similar News