செய்திகள்

புதுக்கடை அருகே கிருஷ்ணன் கோவில் பூட்டை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை

Published On 2018-12-31 10:09 GMT   |   Update On 2018-12-31 10:09 GMT
புதுக்கடை அருகே கிருஷ்ணன் கோவில் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
நாகர்கோவில்:

புதுக்கடையை அடுத்த விழுந்தயம்பலம் பாலக்காவிளை பகுதியில் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று காலையில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் மாலையில் கோவில் நடையை பூசாரி சாத்தி விட்டு சென்றார். மறுநாள் காலையில் பூஜைகள் செய்வதற்காக கோவில் பூசாரி அங்கு வந்தார்.

அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்த பூசாரி அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். மேலும் புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலின் அலுவலக அறையில் இருந்த 3½ பவுன் நெக்லஸ் ஒன்றும், 1½ பவுன் செயின் ஒன்றும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. போலீசார் கோவில் முழு வதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். மேலும் சம்பவம் குறித்து கைரேகை நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் நகை கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதில் கொள்ளையர்களின் 2 கைரேகைகள் பதிவு ஆனது. இந்த கைரேகைகளை கொண்டு பழைய குற்றவாளிகளின் கைரேகைகளோடு போலீசார் ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது கோவிலில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News