ராமநாதபுரத்தில் இன்று விபத்தில் போலீஸ்காரர் பலி
ராமநாதபுரம்:
விருதுநகர் மாவட்டம், பரளச்சி அருகே உள்ள கீழ்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டையன் (வயது 28). இவர் ராமநாதபுரம் ஆயுதப் படையில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு பணியில் இருந்த மொட்டையன் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். ராமநாதபுரம் பால்கரை பகுதியில் சென்றபோது அங்கு சாலையில் லாரி நின்றது.
இதனை போலீஸ்காரர் மொட்டையன் சரியாக கவனிக்கவில்லை. இதனால் மோட்டார் சைக்கிள், நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மொட்டையன் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், ராமநாதபுரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
லாரி டிரைவர் கமுதி ராமச்சந்திரன் (27) கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான போலீஸ்காரர் மொட்டையனுக்கு 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.