செய்திகள்
தேனி அருகே டிப்பர் லாரியில் மண் திருடிய 2 பேர் கைது
தேனி அருகே டிப்பர் லாரியில் கரம்பை மண் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி:
தென்கரை வருவாய் ஆய்வாளர் ராஜகோபால் தலைமையில் வருவாய்த் துறை அலுவலர்கள் தேனி அருகே உள்ள பின்னதேவன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது வைகை ஆற்றங்கரையில் இருந்து கரம்பை மண்ணை டிப்பர் லாரியில் 2 பேர் கடத்தி வந்தனர். அவர்களை அதிகாரிகள் மடக்கி பிடித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் லாரி உரிமையாளர் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில் பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (32) என்பதும் லாரி டிரைவர் காமாட்சி தேவன்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (25) எனவும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மண் கடத்தி வந்த லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.