செய்திகள்

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர் மயங்கி விழுந்து பலி

Published On 2018-12-22 17:00 GMT   |   Update On 2018-12-22 17:00 GMT
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருச்சி:

திருச்சி காட்டூரை சேர்ந்தவர் மோகன், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவரது மகன் சுதர்சன் (வயது 24). இவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக பணி புரிந்து வந்தார்.

இன்று காலை அரசு மருத்துவமனை எம்.எஸ்.1 வார்டில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கழிவறைக்கு சென்ற சுதர்சன் திரும்பி வரவில்லை. இதற்கிடையே கழிவறையை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது டாக்டர் சுதர்சன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். 

அவரை மீட்டு அவசர சிகிச்சை மையத்திற்கு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, இறந்த சுதர்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதர்சனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
Tags:    

Similar News