செய்திகள்

அருமனையில் நாளை கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம்- டி.டி.வி. தினகரன் பங்கேற்பு

Published On 2018-12-22 12:30 GMT   |   Update On 2018-12-22 12:30 GMT
அருமனையில் நாளை கிறிஸ்துமஸ் தாத்தா அணிவகுப்புடன் ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் டிடிவி தினகரன் பங்கேற்கிறார். #ttvdinakaran

மார்த்தாண்டம்:

அருமனை கிறிஸ்தவ இயக்கத்தின் 21-வது கிறிஸ்துமஸ் விழா கடந்த 19-ந்தேதி தொடங்கி நாளை (23-ந்தேதி) ஊர்வலம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மத நல்லிணக்க பொதுக்கூட்டம் ஆகியவற்றுடன் நிறைவடைகிறது.

நிகழ்ச்சியின் முதல் நாள் கலைநிகழ்ச்சிகளும், மாநில அளவிலான இறகு பந்து போட்டியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை மாநில அளவிலான ஓணப்பந்துப் போட்டி நடைபெற்றது. நேற்று மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. இன்று (22-ந்தேதி) மத நல்லிணக்க மாநாடு ஆகியன நடக்கிறது.

நாளை (23-ந்தேதி) நெடிய சாலை சந்திப்பில் இருந்து 60-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஆயிரத்துக்கும் அதிகமான கலைஞர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா அணிவகுப்புடன் ஊர்வலம் நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து நடைபெறும் மதநல்லிணக்க பொதுக்கூட்டத்திற்கு கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸடாலின் தலைமை தாங்குகிறார். தலைவர் டென்னிஸ், பொருளாளர் கென்னத், துணை தலைவர் ஜோஸ் செல்வன், இணை செயலாளர் அருள் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

மேலும் பி‌ஷப்புகள், சட்டமன்ற, நாடாளுமன்ற, உறுப்பினர்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், போதகர்கள், அருட்பணியாளர்கள், கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.

தொடர்ந்து 1000 ஏழைகளுக்கு நல உதவிகள், மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முடிவில் கலைநிகழ்ச்சிகள், திரைப்பட பாடகர்கள் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. #ttvdinakaran

Tags:    

Similar News