நாசரேத்தில் ஓய்வு பெற்ற கல்வி அலுவலரிடம் பணம் திருடிய புரோட்டா மாஸ்டர் கைது
நாசரேத்:
நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. சதுக்கம் பகுதியை சேர்ந்தவர் சுவாமிதாஸ் (வயது 67). ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட கல்வி அதிகாரி (பொறுப்பு). இவர் கடந்த 17-ந் தேதி இரவு நாசரேத் பஜாரில் கடைகளில் பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டின் வெளியே பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது பைக்கின் கவரில் வைத்திருந்த ரூ. 4 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. பணத்தை யாரோ மர்ம நபர் திருடி சென்றுவிட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து சுவாமிதாஸ் நாசரேத் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை சோதனை செய்தனர். சோதனையில் அந்த தெருவில் சிறிது நேரத்தில் ஒரு வாலிபர் பைக்கில் செல்வதையும், பைக் நம்பரும் தெரியவந்தது.
விசாரணையில் அவர் நாசரேத் அருகில் உள்ள ஞானராஜ் நகரை சேர்ந்த இளைய பெருமாள் மகன் ராமச்சந்திரன் (27) என்பதும், பணத்தை அவர் திருடியதும் தெரியவந்தது. இவர் அங்குள்ள கடையில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் துரை வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தார்.