செய்திகள்

வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு - ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் முற்றுகை

Published On 2018-12-19 06:47 GMT   |   Update On 2018-12-19 06:47 GMT
வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள வடதில்லை கிராமத்தில் ஏரிக்கரையில் 26 பழங்குடியின குடும்பங்களை சேர்ந்த 50 பேர் குடிசைகள் அமைத்து சுமார் 75 வருடங்களாக வசித்து வருகின்றனர்.

இதற்கிடையே நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

அதன்படி ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தை சேர்ந்த வருவாய் அதிகாரிகள் வடதில்லை கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினரிடம் குடிசைகளை அகற்றுமாறு உத்தரவிட்டனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் வடதில்லை கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர் இருளர் சமுதாயம் முன்னேற்ற அறக்கட்டளை மாவட்ட தலைவர் முரளி தலைமையில் ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் வக்கீல்கள் வட தில்லை குமார், உதயா, வினோத், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் பழங்குடியினர் தாசில்தார் இளங்கோவனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், “நாங்கள் சுமார் 75 வருடங்களாக வடதில்லை கிராம எல்லையில் வசித்து வருகிறோம். திடீர் என்று வேறு இடத்துக்கு செல்லுங்கள் என்று அதிகாரிகள் உத்திரவிட்டிருப்பது எங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில் உள்ளது. எனவே அரசு புறம்போக்கு நிலத்தில் எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளனர்.

Tags:    

Similar News