போரூர் அருகே ஆட்டோவில் போதை பாக்கு- புகையிலை கடத்தல்: 3 பேர் கைது
போரூர்:
போரூரை அடுத்த அய்யப் பந்தாங்கல் பஸ் நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தியபோது அதில் மூன்று மூட்டைகளில் மாவா தயாரிக்கும் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை, பாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஆட்டோ டிரைவர் வியாசர்பாடியைச் சேர்ந்த விஜய்யை போலீசார் கைது செய்தனர். ஆட்டோ மற்றும் 200 கிலோ மாவா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விஜய் அளித்த தகவலின் படி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிவேஷ்குமார், ராஜேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் பாரிமுனை பகுதியில் இருந்து மாவா பொருட்கள் வாங்கி வந்து அய்யப்பந்தாங்கல் பகுதியில் வீட்டில் வைத்து அறைத்து தயார் செய்து பொட்டலங்களாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.