செய்திகள்

மலைப்பகுதியில் ஆசிரியர்கள் வராவிட்டால் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-12-14 10:20 GMT   |   Update On 2018-12-14 10:20 GMT
கொடைக்கானல் பர்கூர் மலைப்பகுதியில் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒரு வாரத்துக்கு பிறகு வராவிட்டால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Sengottaiyan
ஈரோடு:

ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனர் அலுவலகம் திறப்பு விழா இன்று நடந்தது.

அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையை தலைமை இடமாக கொண்டு 7 மண்டலங்களில் செயல்பட்டு வந்த அரசு தேர்வுத் துறை அலுவலகம் தற்போது 32 மாவட்டங்களிலும் உதவி இயக்குனர் அலுவலகமாக செயல்பட உள்ளது. இதன்மூலம் குரூப் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள்.

அதுமட்டுமின்றி அவர்கள் என்னென்ன தேர்வு எழுதலாம் அதற்குரிய சந்தேகங்கள் இனி அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்த புதிய அலுவலகத்தில் உதவி இயக்குனர் உள்பட 10 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொடைக்கானல் பர்கூர் மலைப்பகுதியில் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்கள் வரவில்லை என்றால் ஒரு வாரம் வரை காத்திருப்போம். அப்படியும் வரவில்லை என்றால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.


மாணவர்களுக்கு வழங்குவதை போன்று ஆசிரியர்களுக்கும் வரும் கல்வியாண்டு முதல் மடிக்கணினி வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் வரும் ஜனவரி மாதம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் மாணவர்களின் ஆதார் பதிவு இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் இந்தியாவில் எங்கு சென்றாலும் அவர்கள் பற்றிய விவரம் மதிப்பெண்களை தெளிவாகத் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
Tags:    

Similar News