செய்திகள்

போட்டோவை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன்- வாலிபர் மிரட்டலால் மாணவி தற்கொலை முயற்சி

Published On 2018-12-12 11:31 GMT   |   Update On 2018-12-12 11:31 GMT
காதலிக்க சொல்லி வாலிபர் மிரட்டல் விடுத்ததால் அதிர்ச்சி அடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

நாகர்கோவில்:

சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை கக்கன்புதூரைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி கவிதா (வயது 39). இவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் தற்போது நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

எனது 2-வது மகள் நாகர்கோவிலில் உள்ள பள்ளிக்கூடத்தில் 12-ம் வகுப்பு படித்தபோது கக்கன்புதூரைச் சேர்ந்த வசந்தராஜன் (21) என்ற வாலிபர் எனது மகளை பின் தொடர்ந்து வந்து காதலிப்பதாக கூறி உள்ளார். எனது மகளையும் காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார்.

இதனால் நான் அந்த வாலிபரையும், எனது மகளையும் கண்டித்தேன். பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்கு சென்ற பிறகும் எனது மகளை அவர் பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி வந்தார். திருமணம் செய்வதாகவும் கூறினார்.

மேலும் தன்னை திருமணம் செய்யாவிட்டால் உனது குடும்பத்தோடு உன்னை வாழ விட மாட்டேன் என்றும் எனது மகளை மிரட்டி வந்தார்.

இந்தநிலையில் கடந்த வாரம் வசந்தராஜனும், அவரது நண்பர் ஒருவரும் எனது வீட்டுக்கு வந்து எனது கணவரிடம் மகளை திருமணம் செய்து தரும்படி கேட்டனர். அப்படி திருமணம் செய்து கொடுக்காவிட்டால் எனது மகளின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு விடுவதாக அவர் மிரட்டினார். இதனால் கடந்த 8-ந் தேதி எனது மகள் வீட்டு கழிவறையில் வைத்து வி‌ஷம் குடித்து விட்டார். பிறகு அவர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

அதன்பிறகும் வசந்தராஜனும், அவரது நண்பரும் தொடர்ந்து எனது மகளிடம் தகராறு செய்து வருகிறார்கள். எனவே வசந்தராஜன் மற்றும் அவரது நண்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதுபற்றி இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து வசந்தராஜன் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.

Tags:    

Similar News